சூப்பர் ... ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை !

 சூப்பர் ... ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை ! 


கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை முதல்நாடாக கண்டுபிடித்து விட்டோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என்று நேற்று அறிவித்தார் . இந்த தடுப்பூசி அனைத்து ஆய்வுகளிலும் வெற்றியடைந்துவிட்டதாகவும் , தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார் . 

இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் , கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவத்துறையினர் உள்பட முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என ரஷிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என ரஷியா அறிவித்த செய்தி உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது . 

இந்நிலையில் , கொரோனா தடுப்பூசி பெறுவது தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்படுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் கூறுகையில் , " கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது . 

இதில் தடுப்பூசியின் விதிகள் உள்பட பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது . இந்த தேசிய நிபுணர் குழு மாநில அரசுகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் வைரஸ் தடுப்பூசி தொடர்பான தகவல்களில் தொடர்பில் இருக்கும் " என்றார் .

கருத்துகள்